தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம்!
தென் தமிழகம், தமிழக வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : காற்றழுத் தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் அவ்வபோதும் தென் தமிழகம், வடதமிழகத்தில் பரவலாகவும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகம், தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னையைப் பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் மாலை, இரவு நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆனைக்காரன்சத்திரத்தில் 6 சென்டிமீட்டர் மழையும், கடலூர் சீர்காழியில் 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.