சென்னை கொருக்குப்பேட்டையில் வயதான தம்பதி தற்கொலை... போலீஸாருக்கு உருக்கமான கடிதம்!
சென்னை கொருக்குப்பேட்டையில் தாங்க முடியாத உடல்நிலை கோளாறுகளால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.
சென்னை: சென்னை கொருக்குபேட்டையில் கவனிக்க ஆளின்றியும் நோயால் அவதிப்பட்டும் வந்த வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம் (75). இவரது மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு ஆனந்தகுமார் என்ற மகனும், ஜானகி என்ற மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி வண்டலூரிலும், விழுப்புரத்திலும் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சண்முகம்- கிருஷ்ணவேணி தம்பதி இன்று அவர்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர். தகவலறிந்த ஆர்.கே. நகர் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தற்கொலைக்கான கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தை சண்முகம் தன் கைப்பட போலீஸாருக்கு எழுதியிருந்தது தெரியவந்தது. அதில் எனக்கு இதய நோயும், எனது மனைவிக்கு சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறும் இருந்தது.
இவற்றை எங்களால் தாங்க முடியவில்லை. அதனால் நாங்கள் இருவரும் சம்மதப்பட்டுதான் இந்த முடிவை எடுத்தோம். எங்கள் மகன் எங்களை நன்றாக வைத்திருந்தான். எங்கள் இஷ்டப்படி நடந்து கொண்டான். எனவே எங்கள் தற்கொலையை காரணம் காட்டி எனது மகனுக்கு தொந்தரவுகளை கொடுக்காதீர்.
நானும் எனது மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவால் எனது மகனை ஒன்றும் செய்யாதீர்கள். இவ்வாறு அந்த தற்கொலை கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாகவும் கடிதத்தில் இருவரும் கையெழுத்திட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications