இன்று இரவு இடியுடன் மழை பெய்யலாம்.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் இரண்டு நாட்களுக்கு முன்பு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவானது. அது பின்னர் வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதன் காரணமாக தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல தமிழக கடலோரப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒட்டிய கடலோரப் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நகரின் சில இடங்களில் கனமழை பெய்யும்.
புதுச்சேரியில் பெரும்பாலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications