முடிவுக்கு வந்த பிரச்சனை.. குடிநீர் விநியோக லாரிகள் ஸ்டிரைக் வாபஸ்.. இன்று வழக்கம்போல் இயங்கும்!
சென்னை : சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகள் இன்று வழக்கம் போல் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ குடிநீர் விநியோகிக்கும் லாரிகளின் உரிமையாளர்கள் நேற்று திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கோடம்பாக்கம், தியாகராய நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் 4 நாட்களாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் விநியோகம் செய்யும் லாரிகளுக்கு போதிய அளவில் தண்ணீர் வழங்கவில்லை என கூறி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தென் சென்னை முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருக்கும் இரண்டு தண்ணீர் நிரப்பும் நிலையங்களில் ஒரு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்யாததால் லாரிகளுக்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

இதனிடையே, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் "பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்வதில் எந்த விதமான பாதிப்பும் இல்லை. சென்னை குடிநீர் வாரியத்திற்கு ஓடும் 428 லாரிகளில் 42 லாரிகள் மட்டுமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் குடிநீர் வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாகவும், இன்று வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications