காதலியை கிண்டல் செய்ததால் வாலிபரைக் கடத்திய காதலன்- கும்பலுடன் கைது!
சென்னை: சென்னையில் காதலியை கிண்டல் செய்த வாலிபரை காரில் கடத்தி கொல்ல முயற்சித்ததாக காதலனை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசிய வாலிபர் ஒருவர் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
கோயம்பேடு பஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவரை காரில் குண்டு கட்டாக ஏற்றி ஒரு கும்பல் கடத்திச் செல்கிறார்கள் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த காரின் நம்பரும் தெரிவிக்கப்பட்டது.
வாகன சோதனைக்கு உத்தரவு:
இதையொட்டி கோயம்பேடு பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். குறிப்பிட்ட கார் நம்பரைச் சொல்லி சென்னையில் உள்ள அனைத்து செக்போஸ்டுகளிலும் வாகன சோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.
மடக்கிப் பிடித்த போலீஸ்:
போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் குறிப்பிட்ட காரை மதுரவாயல் பகுதியில் போலீசார் மடக்கினார்கள். காரில் இருந்த முத்துராஜ், அருண், வினோத், ராபர்ட் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரணை:
முத்துராஜ் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆவார். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புகார் கூறப்பட்ட கடத்தல் கதாநாயகன் அருண் என்று தெரியவந்தது. அருணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
மேடை பாடகி காதலி:
அவ்விசாரணையில், "சென்னை எம்.கே.பி.நகரில் எனது காதலி வசிக்கிறார். மேடை பாடகியான அவர் கோயம்பேட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
தவறாக நடக்க முயற்சி:
நிகழ்ச்சி முடிந்தபிறகு வீடு செல்வதற்கு பஸ் ஏற கோயம்பேடு பஸ் நிலையம் வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார்.
செல்போனில் தகவல்:
இதுபற்றி எனது காதலி செல்போனில் பேசி எனக்கு தகவல் சொன்னார். நானும் அந்த பகுதியில் எனது நண்பர்களுடன் காரில் உட்கார்ந்து இருந்தேன்.
அடையாளம் காட்டியவர்:
உடனே எனது நண்பர்களுடன் காரில் கோயம்பேடு பஸ் நிலையம் வந்தேன். எனது காதலியிடம் தகராறு செய்த வாலிபர் அங்கே நின்றுகொண்டிருந்தார். அவரை எனது காதலி அடையாளம் காட்டினார்.
வாலிபருக்கு அடி, உதை:
உடனே அந்த வாலிபரை நாங்கள் வந்த காரில் கடத்திச்சென்று அடித்து உதைத்தோம். பின்னர் அந்த வாலிபரை காரை விட்டு இறக்கி விட்டுவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.
தேடுதல் வேட்டை:
இறக்கி விடப்பட்ட வாலிபர் பற்றிய விவரம் எதுவும் தெரியவில்லை. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
போலீசுக்கு பாராட்டு:
இந்த சம்பவத்தில் தகவல் கிடைத்தவுடன் மின்னல் வேகத்தில் செயல்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்த போலீசாரை கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.