வீணை காயத்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை: தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழக துணை வேந்தர் வீணை காயத்திரியின் அறையை சூறையாடி ,அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் தமிழ்நாடு இசைக் கல்லூரியில் 2010 முதல் 2013ம் ஆண்டு வரை படித்துவந்தார். பல்கலைக்கழகத்திற்கு சரியாக வராத அவரை பல்கலைக்கழக நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது.
இதனையடுத்து பழனிகுமாருக்கும் , அவரது நண்பர் விக்னேஷ்க்கும் பல்கலைகழக நிர்வாகம் பட்டமளிப்பு விழா அழைப்பிதழை அனுப்பவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பழனிக்குமார், கடந்த 24ம் தேதி சென்னை ராஜ அண்ணாமலை புரத்திலுள்ள தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில், ஐந்து அறைகளை அடித்து நொறுக்கினார்.
இதில் அப்பல்கலைக்கழக துணைவேந்தர் அறையும் இவரால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் துணை வேந்தருக்கு கொலை மிரட்டல் கடிதத்தையும் எழுதி வைத்துச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த துணைவேந்தர் காயத்திரி, மாநகர காவல் ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்தார். முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து நடந்த சம்பவத்தை நேரில் விளக்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய வீணை காயத்ரி , எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. கொலை மிரட்டல் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார். தனிப்பட்ட முறையில் யார் மீதும் சந்தேகம் இல்லை. சம்பவம் தொடர்பாக எப்.ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல், ஒழுக்கமின்மை, பல்கலை விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். சிசிடிவி காட்சிகள் கடந்த ஒரு வாரமாக பதிவாகவில்லை என்று கூறினார்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் முன்னால் மணவரான பழனிக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.