பண்ணை வீடுகளில் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு சென்னை போலீஸ் தடை
சென்னை: சென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றன.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் பார்ட்டி என்ற பெயரில் கொண்டாட்டங்கள் இடம் பெறும். இதில் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதில், பலர் மது அருந்தி அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக காவல்துறை மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது.

இதே போல் புத்தாண்டு தினத்தில் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டி செல்வதால் விபத்துக்களும் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கும், நட்சத்திர ஹோட்டல்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த வாரம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துவிட வேண்டும் என்றும், குடிபோதையில் இருப்பவர்கள் கார் ஓட்டுவதற்கு ஹோட்டல் நிர்வாகம் அனுமதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீஸ் அனுமதியின்றி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுமார் 600 பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் தாமரைக் கண்ணன், ராஜேஸ்தாஸ், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் தினகரன், அருண் ஆகியோர் மேற்பார்வையில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க 50 க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications