அடையாளம் காணுவதில் சிக்கல்.. சுவாதி கொலையாளி போட்டோவை ஹைதராபாத்தில் மெருகேற்றும் போலீசார்!
சென்னை: சுவாதி கொலையாளியின் உருவப்படத்தை மேலும் கூடுதலாக தெளிவாக்கி, ஊடகங்களில் வெளியிட திட்டமிட்டுள்ள போலீசார், இதற்காக ஹைதராபாத்திலுள்ள ஆய்வகத்திற்கு படத்தை அனுப்பியுள்ளனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இன்போசிஸ் ஊழியர் சுவாதி, அடையாளம் தெரியாத வாலிபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இதனிடையே ரயில் நிலையம் அருகேயுள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிரா காட்சிகள் போலீஸ் வசம் சிக்கின. காலை 6.32 மணிக்கு கொலையாளி ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு முன்பாக பதிவான காட்சி இது.

ஓடும் காட்சி
இந்நிலையில், கொலை நடைபெற்ற பிறகு, அரிவாளோடு, ரயில் நிலையத்தை விட்டு வெளியே கொலையாளி ஓடும் காட்சி, ஒரு வணிக நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது.

தெளிவான படம்
கொலையாளி தப்பியோடும் காட்சி நேற்று போலீசாரால் வெளியிடப்பட்டது. மேலும், ரயில் நிலையத்திற்குள் கொலையாளி வரும்போது பதிவான காட்சிகளை மெருகேற்றி, சற்று தெளிவான உருவப்படம் நேற்று வெளியிடப்பட்டது.

தெளிவு போதாது
இருப்பினும் இதுவரை கொலையாளி குறித்து யாரும் அடையாளம் காட்டவில்லை. தெளிவான படம் என்று போலீசார் கூறினாலும்கூட, கொலையாளியின் முகம் அதில் தெளிவாக இல்லை என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

துப்பு கிடைக்கவில்லை
விசாரணை அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக் கழகத்தில், பயின்றபோது, சுவாதிக்கு நண்பரான ஒரு இன்ஜினியரிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் கொலை செய்யும் அளவுக்கு யாருக்கும் சுவாதி மீது கோபம் இருந்ததாக இதுவரை துப்பு கிடைக்கவில்லை.

எங்கே சென்றான்
கொலையாளி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து டூ வீலர் மூம், சூளைமேடு ஹை ரோடு பகுதிக்கு சென்றுள்ளான். அதன்பிறகு எங்கே போனான் என்பதுதான் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பஸ், ரயில் நிலையங்கள்
வெளியூர் தப்பி செல்வதற்காக சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் அல்லது, கோயம்பேடு பஸ் நிலையத்தை அவன் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கெல்லாம் உள்ள சிசிடிவி காமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தோம். இதுவரை துப்பு தெரியவில்லை.

முயற்சி கிடையாது
கொலையாளி தப்பியோடும்போது அவனை விரட்டி பிடிக்க சிலர் முயன்றதாக கூறுவதெல்லாம் கட்டுக்கதை. யாரும் கொலையாளியை விரட்டவும் இல்லை, அவன் எங்கே செல்கிறான் என்பதை கூட பார்க்கவும் இல்லை. ஒரு வாரம் ஆகியும், கொலையாளி குறித்து பொதுமக்கள் யாரும் துப்பு தரவும் இல்லை.

ஏன் இந்த சிக்கல்
கொலையாளி சமூக நீரோட்டத்தில் இருந்து விலகியே இருக்க கூடியவனாக இருக்க கூடும், அல்லது வேறு மாநிலத்தை சேர்ந்தவனாக இருக்க கூடும். எனவேதான், அவனை அடையாளம் காணுவதில் மக்களுக்கு சிக்கல் இருக்கிறது என நினைக்கிறோம்.

ஹைதராபாத்தில் மெருகேற்றம்
சுவாதி கொலையாளியின் உருவப்படத்தை மேலும் கூடுதலாக தெளிவாக்கி, ஊடகங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அப்படியாவது குற்றவாளியை யாராவது அடையாளம் காட்டுவார்களா என நம்புகிறோம். இதற்காக ஹைதராபாத்திலுள்ள ஆய்வகத்திற்கு படத்தை அனுப்பியுள்ளோம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications