அடுத்த 24 மணி நேரம் வெளியில் போனா குடை எடுத்துட்டு போங்க... கனமழைக்கு வாய்ப்பிருக்காம்!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை : வளிமண்டல மேல்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரலவாக மழை பெய்து வருவதால் மாநிலத்தில் நிலவிய தண்ணீர் பஞ்சம் நீங்கி நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
கர்நாடகா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் உள்ள மேட்டூர், பவானி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாத்தையொட்டியுள்ள தமிழக எல்லையில் வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வபோது மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பரவலாக பெய்து வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து தண்ணீர் பஞ்சத்தை கண்ட சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.