வெப்பமான ஜூலை மாதம்…. காரணம் என்ன? சொல்கிறார் ரமணன்
சென்னை: ‘ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு' என்று வைரமுத்து எந்த நேரத்தில் எழுதினாரோ தெரியாது... சென்னையில் அடிக்கிற வெயிலுக்கு எந்த ஜோடியின் மனசும் சேராது போல இருக்கே. ஸ்.. ஸ்...அப்பா என்னா வெயில் என்று புலம்பித் தவிக்கின்றனர் சென்னைவாசிகள்.
அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறிவந்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூட சென்னையில் ஜூலை மாதத்தில் வெயில் அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார். வட மேற்கு திசையில் வெப்பக் காற்று வீசுவதால் சென்னையில் வெயில் அதிகரித்துள்ளதாகவும் காரணம் சொல்கிறார் ரமணன்.

கொளுத்தும் வெயில்
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வெப்பமான ஜூலை மாதமாக இந்த மாதம் உள்ளது. அக்னி நட்சத்திர வெயிலையே அடித்து சாப்பிட்டு விட்டது.

100 ஆண்டுகளுக்கு முன்
சென்னையில் 1915ம் ஆண்டு ஜூலை மாதம் பதிவான 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பம்தான் ஜூலை மாதத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பமாகும். 2006ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிக பட்ச வெப்பமாக 40.1 டிகிரி பதிவாகியுள்ளது. அதன் பிறகு இந்த வருடம் ஜூலை 5ம் தேதி 40.1 டிகிரியும், 6ம் தேதி 40.5 டிகிரியும், நேற்று 7ம் தேதி 40.7 டிகிரியும் பதிவாகியுள்ளது.

பீதி கிளப்பாதீங்க பாஸ்
இது பாரன்ஹீட்டில் சொன்னால் 105 டிகிரி என்று பீதியை கிளப்பும். படிக்கும் வாசகர்கள் ஏன் பீதியடைய வேண்டும் என்பதாலேயே பலரும் செல்சியசில் கூறுகின்றனர்.

என்ன காரணம்
சென்னையில் வெயில் அடித்தாலும் கடல் காற்று வீசும் அதன் மூலம் அனலில் இருந்து தப்பிக்கலாம். ஆனால் இப்போது வீசும் காற்றே அனலாக இருக்கிறது. உடம்பில் வியர்குரு வேறு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஏன் இப்படி என்று மூன்று காரணங்களை கூறுகிறார் ரமணன்.

குறைந்து போன மழை
பொதுவாக தென்மேற்கு பருவ மழை காலத்தில் தமிழகத்தின் மேற்கு பகுதிகளில் மழை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக அப்பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது. அதனால் வட மேற்கு திசையிலிருந்து வீசக்கூடிய காற்று வெப்பமாக உள்ளது.

கடல் காற்று தாமதம்
பொதுவாகவே காலை 10.30 மணிக்கு கடல் காற்று வீச தொடங்கினால் சென்னைவாசிகளுக்கு வெப்பம் தெரியாது. ஆனால் சில நாட்களில் மதியம் 2.15 மணிக்கு மேல்தான் கடல் காற்று வீசத் தொடங்குகிறது. அதுவும் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடுகிறது. இதுதான் புழுக்கத்திற்குக் காரணம் என்கிறார் ரமணன்.

மேகம் எங்கே போச்சு
கடந்த சில நாட்களாகவே மேகங்கள் இல்லாத தெளிந்த வானம் காணப்படுகிறது. இந்த காரணங்களினால் சென்னையில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறுகிறார் ரமணன்.

சற்றே ஆறுதல் செய்தி
வரும் நாட்களில் மேற்கு பகுதிகளில் மழை பெய்யும் என்பதாலும், வானத்தில் மேகங்கள் அதிகரித்து சென்னையில் வெப்பம் சற்று குறைய வாய்ப்பிருக்கிறது என்று ஆறுதல் தரும் செய்தியைக் கூறியுள்ளார் ரமணன்.












Click it and Unblock the Notifications