'ஆபரேஷன் வெட்டிங் ஹால்'- சென்னையில் 26/11 போல் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்!
சென்னை: மும்பை பாணியில் சென்னையில் முக்கிய இடங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை போலீசாரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பும் உரிய நேரத்தில் இந்த தாக்குதல் சதித் திட்டத்தை கண்டறிந்து முறியடிக்காமல் போயிருந்தால் மும்பையைப் போல பயங்கரவாத தாக்குதலுக்கு சென்னையும் உள்ளாகி இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த மேஜர் சமீர் அலி, மேஜர் இக்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நியமித்தது. இவர்கள் இருவரும் இலங்கை தலைநகர் கொழும்பில் பணியாற்றிய தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக்கிடம் சதியை அரங்கேற்றும் பொறுப்பை ஒப்படைத்தனர்.

அருண் செல்வராசன், ஷாகிர் ஹூசைன்
சித்திக் முதலில் இரண்டு இலங்கை நாட்டவரை சென்னை அனுப்பி உளவு பார்க்க வைத்தான். அந்த இருவர்தான் அருண் செல்வராஜன் மற்றும் ஷாகிர் ஹூசைன்.. இவர்கள் சென்னைக்குள் ஊடுருவி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உட்பட குண்டுவெடிப்பை நடத்துவதற்கு வாய்ப்புள்ள மிக முக்கியமான இடங்களை வேவு பார்த்து தகவல்களைத் திரட்டினர். அருண் செல்வராஜூக்கு சிக்கல் ஏற்பட்டால் சித்திக் மேலும் பலரை அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தான்.

கடல் வழியே வெடிபொருட்கள்
இந்த தாக்குதல் நடத்துவதற்கான வெடிபொருட்களை இலங்கையின் மன்னாரில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு கடத்திக் கொண்டு வர படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஐ.எஸ்.ஐ. திட்டம் இதுதான்...
சென்னை நகரின் மக்கள் நெரிசலாக நடமாடும் இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தனர்.. அவர்களது நோக்கமே ஒட்டுமொத்த பாதுகாப்பு நிர்வாகத்தையே முடக்கிப் போடுவது என்பதுதான்..
அதாவது இப்படி குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு அதில் பாதுகாப்பு தரப்பினர் கவனத்தை செலுத்தும் போது பிற தீவிரவாதிகள் ஏகே-47 ரக துப்பாக்கிகள் முனையில் சென்னை நகரை கைப்பற்றி பொதுமக்கள், வெளிநாட்டு பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்துவது என்பது ஐ.எஸ்.ஐ. திட்டம்.

5 தீவிரவாதிகள்.. பெங்களூரு டூ சென்னை
இதற்காக மொத்தம் 5 பேரை சென்னைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். இருவர் பாகிஸ்தான் நாட்டவர்... எஞ்சிய மூவர் மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்கள்..
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை இலங்கை தூதரகத்தில் பணியாற்றி சித்திக் தயார் நிலையில் வைத்திருந்தான்.. முதலில் அவர்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து சென்னைக்குள் ஊடுருவச் செய்ய திட்டமிட்டிருந்தனர்.. அதுவும் முதலில் மாலத்தீவு சென்றுவிட்டு அங்கிருந்து மூன்று தீவிரவாதிகளுடன் இணைந்து அப்படியே பெங்களூருக்குள் ஊடுருவி கடைசியாக சென்னையில் ஒன்றிணைவது இவர்கள்து ப்ளான்.

கடைவீதிகள் டூ அமெரிக்கா தூதரகம்
இந்த 5 பேருக்கும் கொழும்பு மற்றும் மாலத்தீவில் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தனர்.. சென்னை கடைவீதிகளில் தாக்குதலைத் தொடங்கி கடைசியாக அமெரிக்கா தூதரகத்தை தகர்ப்பது என்பது ஐ.எஸ்.ஐ. போட்டுக் கொடுத்த திட்டம்.

ஆபரேஷன் வெட்டிங் ஹால்
இந்த திட்டத்துக்கு வைக்கப்பட்ட பெயர் 'ஆபரேஷன் வெட்டிங் ஹால்'... சென்னை நகரையே நிலைகுலைய வைக்கும் வகையிலான தாக்குதலை நடத்துவதுதான் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஒற்றை இலக்காக இருந்தது. இதன் மூலமாக தென்னிந்தியாவுக்குள் கால் பதித்துவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தது ஐ.எஸ்.ஐ. ஆனால் உரிய நேரத்தில் சென்னை போலீசாரும் தேசிய புலனாய்வு ஏஜென்சியும் கண்டுபிடித்து மிகப் பெரிய சதியை முறியடித்திருக்கின்றனர்.
தப்பியது சென்னை!












Click it and Unblock the Notifications