கிண்டியில் புகை தள்ளிக்கொண்டு போன வண்டி.. கார் ஓனருக்கு வேப்பிலை அடித்த சென்னை போலீஸ்
சென்னை: சென்னை கிண்டியில் புகை தள்ளியபடி சென்ற கார் குறித்து தமிழரசன் என்பவர் சென்னை போக்குவரத்து போலீசாரின் ட்விட்டரை டேக் செய்து கடந்த மே 18ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த காரின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டுகிறார்கள்.
சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவிகளை பொருத்தி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே போக்குவரத்தை போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதன் காரணமாக சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்வோர், சிக்னலை மீறி செல்வோர், மூன்று பேர் ஒரு வாகனத்தில் செல்வது, ரேஸ் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் நம்பர் பிளேட் தெளிவில்லாமல் இருந்தாலும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கார், ஆட்டோ, கனரக வாகனங்களுக்கும் பல்வேறு வகையான அபராதம் விதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் முன்பு போல் இல்லை. இப்போது அபராத தொகை மிகமிக அதிகமாகும். ஹெல்மெட் இல்லாமல் போனால் ஆயிரம் ரூபாயும், இன்சூரன்ஸ் இல்லை என்றால் 2000 ரூபாயும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் பல்வேறு விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களை போட்டோ அல்லது வீடியோ எடுத்து, நேரம், இடத்தை குறிப்பிட்டு, போக்குவரத்து போலீசாரை டேக் செய்து பொதுமக்களே வாகனங்கள் குறித்து புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறார்கள். உண்மையில் விதிமீறலில் அந்த சமயத்தில் வாகனத்தில் சென்று இருந்தது உண்மை என்றால் அபராதம் கண்டிப்பாக விதிக்கிறார்கள். குறிப்பிட்ட நபரின் வீட்டிற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து பதிலும் அளிக்கிறார்கள்,.
இந்த விஷயம் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடைமுறையில் இருக்கிறது. சென்னை கிண்டியில் புகை தள்ளியபடி கார் ஒன்று சென்றுள்ளது. அந்த காரின் புகையால் சக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். வாகனங்கள் புகை தள்ளியபடி சென்றால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அதற்காக கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் கிண்டியில் புகை தள்ளியபடி சென்ற கார் குறித்து தமிழரசன் என்பவர் சென்னை போக்குவரத்து போலீசாரின் ட்விட்டரை டேக் செய்து கடந்த மே 18ம் தேதி புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் "இன்று மதியம் 12 மணி அளவில் சென்னை கிண்டியில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி அதிகப்படியான புகையை வெளியேற்றி கொண்டு இந்த வாகனம் சென்று கொண்டிருக்கிறது. மற்ற வாகன ஓட்டிகள் இதனால் பாதிக்க பட்டனர். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேட்டிருந்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், அந்த காரின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில், சென்னையில் பல வாகனங்கள் அதிகப்படியான புகை மாசை ஏற்படுத்துகின்றன.. இந்த விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த தனியாக ஒரு நாளை திட்டமிடுங்கள் என்றார். பெரும்பாலான வாகனங்களுக்கு மாசு சான்றிதழ் இல்லை என்று நெட்டிசன் ஒருவர் குற்றம்சாட்டினார்.