விபத்தில் மூளைச்சாவு அடைந்த வெல்டிங் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
சென்னை: விபத்தில் மூளைச் சாவு அடைந்த வெல்டிங் வேலை செய்பவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(40). வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி லட்சுமி. அவர்களுக்கு 9 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் உறவினர் ஒருவர் கடந்த 22ம் தேதி மரணம் அடைந்தார். துக்க வீட்டுக்கு சென்ற கிருஷ்ணமூர்த்தி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இறுதி ஊர்வலம் தங்கசாலை பார்த்த சாரதி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஷேர் ஆட்டோ ஒன்று தாறுமாறாக வந்து ஊர்வலத்தில் புகுந்தது. ஆட்டோ புகுந்ததில் கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனே ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் கிருஷ்ணமூர்த்திக்கு வியாழக்கிழமை இரவு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி முன்வந்தார். அதன்படி கிருஷ்ணமூர்த்தியின் இதயம், சிறுநீரகம், கண்கள் உள்பட 5 உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
இதற்கிடையே குடிபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பாபு கைது செய்யப்பட்டார்.