செக் மோசடி வழக்கு: மகளுடன் ஏப்ரல் 13-ம் தேதி ஆஜராக இயக்குனர் சேரனுக்கு கோர்ட் உத்தரவு
ராமநாதபுரம்: செக் மோசடி வழக்கில் இயக்குநர் சேரன் தனது மகள் நிவேதா பிரியதர்ஷினியுடன், ஏப்ரல் 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் ராமநாதபுரத்தில் பழனியப்பா டிரேடர்ஸ் என்ற பெயரில் தொழில் நடத்தி வருகிறார்.
பழனியப்பன் இயக்குநர் சேரனின் சி 2 எச் நெட்வொர்க் நிறுவனத்தில் ரூ.8.40 லட்சம் முன்பணம் செலுத்தி, ராமநாதபுரம் மாவட்டத்தில் சினிமா டிவிடி விற்பனை உரிமையை பெற்று இருந்தார்.

சேரனின் நிறுவனம் முறையாக செயல்படாததால், தான் முன்பணமாக செலுத்திய ரூ.8.40 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டிருக்கிறார்.
தொடர்ந்து நிறுவனர் சேரன் மற்றும் நிர்வாக இயக்குநருமான நிவேதா பிரியதர்ஷினி(சேரன் மகள்) இருவரும், 2015ம்ஆண்டு ஆக.16-ந்தேதி பழனியப்பனுக்கு காசோலை வழங்கியிருந்தனர்.
சேரன் கொடுத்த காசோலையை பழனியப்பன் 3 முறை வங்கிக்கு அனுப்பியும், பணம் இல்லாததால் காசோலை பழனியப்பனிடமே திரும்பியது. இதைத் தொடர்ந்து பழனியப்பன் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ராமநாதபுரம் ஜே.எம் 2 நீதிபதி வேலுச்சாமி விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
தற்போது இந்த வழக்கில் இயக்குநர் சேரன் மற்றும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினி இருவரும் ஏப்ரல் 13-ம் தேதி நேரில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications