தவறாக எதையும் பேசவில்லை... வருத்தமோ விளக்கமோ அவசியமில்லை! - இயக்குநர் சேரன்
சென்னை: இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் தவறாக எதையும் பேசவில்லை. எனவே விளக்கமோ வருத்தமோ தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று இயக்குநர் சேரன் ஒன் இந்தியாவிடம் தெரிவித்தார்.
நேற்று நடந்த கன்னா பின்னா இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் திருட்டு விசிடி குறித்து பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
'இந்த திருட்டு விசிடியை வெளியிடுபவர்கள் இலங்கைத் தமிழர்கள்தான். இவர்களுக்காக இங்கே போராட்டங்கள் நடத்தியதை நினைத்தால் அறுவறுப்பாக உணர்கிறேன்', என்று மேடையில் அவர் கூறினார்.
இகற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள், ஆதரவுக் குரல்கள் என சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் சேரனிடம் இன்று ஒன் இந்தியா சார்பில் பேசினோம்.
சேரன் கூறுகையில், "முதலில் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். நான் நேற்று சில உண்மைகளைச் சொன்னேன். அதற்காக விளக்கமோ வருத்தமோ தெரிவிக்கும் நிலையில் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.
உலகில் உள்ள அத்தனை தமிழர் அமைப்புகளுக்கும் என்னைப் பற்றித் தெரியும். அவர்கள் யாரும் என்னிடம் இதுகுறித்துக் கேட்கவில்லை. இங்குள்ள சிலர்தான் இதைப் பிரச்சினையாக்குகிறார்கள்.
இங்கிலாந்தில் உள்ள 400 தமிழ்க் குடும்பங்களுக்கு நான் மிக நெருக்கமானவன். ஆனால் அவர்கள் யாருமே இதைப் பற்றிப் பேசவில்லை. காரணம் நான் இலங்கைத் தமிழர்களை எதிர்த்துப் பேசவில்லை.
கடந்த இருபது ஆண்டுகளாக வீடியோ கேசட் வடிவிலிருந்து, சிடியாகி, டிவிடியாகி இப்போது ஆன்லைனில் படம் வெளியாகும் அன்றே அல்லது அதற்கு முன்னமே படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுகிறார்கள். அதுவும் தயாரிப்பாளருக்கு சவால்விட்டு ஒளிபரப்பாகும் சூழல் வந்துவிட்டது.
இந்த இணைய தளங்களை நடத்துபவர்கள் யார்? திருட்டு டிவிடி சப்ளை பண்ணுபவர்கள் யார்? இலங்கையைச் சேர்ந்த சிலர்தான். இது அனைவருக்குமே தெரியும்.
இதை உரிமம் பெற்று, உரிய அனுமதியுடன் செய்யுங்கள் என்று கூறித்தான் நான் சிடுஎச் என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். இதன் கிளைகளை வெளிநாடுகளில் தொடங்க முனைந்தபோது அதைத் தடுத்தவர்கள் இலங்கைத் தமிழர்களில் சிலர்தான். 'சிடுஎச் எதற்கு... லைசென்ஸ் வாங்கி டிவிடி விற்றால் தவறான பழக்கமாகிவிடும். ஒரு டிவிடி காப்பி வாங்கி பத்தாயிரம் காப்பி அடிச்சி விக்கலாம்,' என்று தவறான வழியில் அவர்களைக் கொண்டு சென்றவர்கள் இவர்கள்தான்.
இந்த மாதிரி தவறானவர்களைத்தான் நான் குற்றம்சாட்டுகிறேன். அதில் என் பக்கம் உள்ள நியாயம் புரிந்த அத்தனைப் பேரும் என்னை ஆதரிக்கிறார்கள். அமைதி காக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பதினெட்டாயிரம் திருட்டு டிவிடி விற்போருக்கு எங்கிருந்து அந்த டிவிடிகள் வருகின்றன? வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள்தானே இவற்றை சப்ளை செய்கின்றனர்? இதனால் எத்தனை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்?
இந்த திருட்டு டிவிடி தயாரிப்போரை தடுத்து நிறுத்த ஒரு நடவடிக்கை எடுக்கட்டும் என்னை விமர்சிப்பவர்கள். அப்புறம் பேசலாம் மற்றவற்றை.