'சேரி பிஹேவியர்' காயத்ரி பேச்சுக்கு விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும்.. வலுக்கும் கண்டனங்கள்
சேரி பிகேவியர் என்று காயத்ரி ரகுராம் பேசிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் பேஸ்புக்கில் வலுத்து வருகிறது. இதற்காக விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் 'எச்ச' என்று சொல்லி அவமானத்தை தேடிக் கொண்டார். தற்போது சேரி பிகேவியர் என்று சொல்லி இருக்கிறார்.
அவரது இந்த இழிவான செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் விஜய் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் வலுத்து வருகிறது.
மேலும், பகுத்தறிவு பேசும் கமல் ஹாசன் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது. எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், கள செயல்பாட்டாளர்கள் பேஸ்புக்கில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில இதோ..

விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும்
""சேரி பிஹேவியர்" என்ற கூற்றினை ஒளிபரப்பியதற்கு விஜய் டிவி மன்னிப்பு கேட்க வேண்டும். பெரியார் திடல் சென்று பகுத்தறிவு பேசும் கமல்ஹாசன் இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும். அனைவரும் பரவலாக கண்டித்தால்தான் இது நடக்கும். இல்லாவிட்டால் இது போன்ற கூற்றுக்களை தொடர்ந்து இயல்பாக்குவது பழக்கமாகிவிடும். காயத்ரி ரகுராம் என்ன வேண்டுமானால் கூறலாம். ஆனால் அதை ஒளிபரப்புவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது விஜய் டிவிதான்." எழுத்தாளர் ராஜன்குறை கண்டனம் தெரிவித்துள்ளார்.

வன்கொடுமைத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு
"சேரி பிகேவியர் என்று பிக்பாஸில் ஓவியாவைத் திட்டும் காயத்திரியின் ஜாதி வன்மத்தைத் தொடர்ந்து அனுமதிக்கும் விஜய் டிவி யை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அவ்வார்த்தைகளைக் கேட்டு மறுப்பேதும் சொல்லாத சினேகன் போன்ற ஜாதியக் கோளாறுகள் தமிழ்ப்படைப்பாளிகள் என்று அலைவது அவமானம்.
வன்கொடுமைத் தடைச்சட்டத்தின்படி காயத்திரி மீதும் விஜய் டிவி மீதும் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொளவோம்." என்று கவிஞரும் கள செயல்பாட்டாளருமான யாழன் ஆதி தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

அடிகளை வாங்குவதுதான் சேரி பிஹேவியர்
"ஜல்லிகட்டு கும்பலை காப்பாற்ற அவர்கள் மேல் விழ வேண்டிய அடிகளை தன் மீது வாங்கிக்கொண்டான் பார் அதுதான் சேரி பிகேவியர்." என்று பால சுப்ரமணியன் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
காயத்ரி மன்னிப்பு கோர வேண்டும்
"இந்த வீடியோவில் காயத்திரி ஓவியாவை பார்த்து சேரி பிகேவியர் என்று சொல்கிறார். அதை விஜய் டிவி வெளியிட்டும் இருக்கிறது. இதற்கு விஜய் டிவியும், காயத்திரி மன்னிப்பு கேட்க வேண்டும்.
வன்கொடுமை சட்டத்தின் மூலம் வழக்கு பதிவு செய்ய முடியும் என்றால் வழக்கு பதிவு செய்யுங்கள்." என்று பதிவிட்டுள்ளார் சித்தார்த் செங்கு.
நவீன தீண்டாமை
""சேரி பிகேவியர்", "மிகவும் அழுத்தமாக விஷம்"
பிக் பாஸ் ப்ரமோவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், மிக வன்மையாக கண்டிக்க வேண்டியவைகள்.
என் மனதில் விழுந்த கேள்விகள்
1. சேரி பிகேவியர் என்றால் என்ன?
2. சேரி பிகேவியரில் என்ன தவறு உள்ளது? அதை ஏன் இளக்கமாக பார்க்கவேண்டும்?
3. ஒருவரை இழிவாக பேச ஏன் சேரியுடன் ஒப்பிட வேண்டும்? அங்கு வாழ்பவர்கள் மனிதர்கள் இல்லையா? அவர்கள் வாழ்வுமுறையில் என்ன தவறு உள்ளது?
3. அப்படி என்றால் ஒருவரை உயர்வாக சொல்ல அக்ரஹாரம் பிகேவியர் என்று சொல்லப்படுமா? இவர்கள் வாழ்வுமுறையில் என்ன பிரமாதமாக உள்ளது?
நான் அந்த நிகழ்ச்சியை ஒருமுறை கூட பார்த்ததில்லை. இந்த பிரமோ சற்று வருத்தமாக உள்ளது. இதை தான் நவீன தீண்டாமை என்கிறேன்." இவ்வாறு வடிவள்ளுவன் அழகப்பன் தனது பேஸ்புக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications