சர்ச்சை எதுக்கு... தமிழகத்தில் இருந்தே ராஜ்யசபா எம்.பி.யாக ப.சிதம்பரம் மும்முர லாபி
சென்னை: கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக ப.சிதம்பரம் முயற்சி; ப.சிதம்பரத்துக்கு கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு என்ற செய்திகள் ஒவ்வொரு ஆண்டும் வந்து கொண்டே இருக்கிறது... இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் இருந்தே ராஜ்யசபா எம்.பி.யாவதற்கான லாபிகளை ப.சிதம்பரம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக ராஜ்யசபா எம்.பி.க்களான நவநீதகிருஷ்ணன், ரபி பெர்ணார்ட், பால் மனோஜ் பாண்டியன், காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பன், திமுகவின் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு ஆகியோரது பதவிக் காலம் முடிவடைய உள்ளது. இந்த 6 காலி இடங்களுக்கான தேர்தல் அறிவிக்கை வரும் 24-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. ராஜ்யசபா எம்.பி. தேர்தல் ஜூன் மாதம் 21-ந் தேதி நடைபெறூம்.

33 இடங்களை பெறுமா காங்?
இந்த 6 எம்.பி.க்களையும் புதிய தமிழக எம்.எல்.ஏ.க்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளனர். சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மே 19-ந் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 33 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் தேவை. தற்போதைய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 33 இடங்களில் வென்றால் எளிதாக ஒரு ராஜ்யசபா எம்.பி. அக்கட்சிக்கு கிடைக்கும். இல்லையெனில் திமுகவின் ஆதரவைத்தான் கோர வேண்டும்.

கர்நாடகா பஞ்சாயத்து
எதிர்வரும் ராஜ்யசபா தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. ப.சிதம்பரத்தைப் பொறுத்தவரையில் லோக்சபா தேர்தலில்தான் போட்டியிட்டுள்ளார். கடந்த ராஜ்யசபா தேர்தலின் போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து ப.சிதம்பரம் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் இருந்தே...
இந்த ஆண்டும் அப்படியான ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்தில் இருந்தே ராஜ்யசபா எம்.பி.யாவதற்கான லாபிகளில் சிதம்பரம் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

திமுக ஆதரவு தரும்
கடந்த 2013-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் திமுகவின் கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. ஆகையால் இம்முறை திமுக நிச்சயம் ஆதரவு தரும் என காத்திருக்கிறது காங்கிரஸ்.

சுதர்சன நாச்சியப்பன்
அதே நேரத்தில் தமக்கான டெல்லி லாபிகள் மூலம் சுதர்சன நாச்சியப்பன் மீண்டும் எம்.பி.யாவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். எப்படியாவது 2-வமுறையும் ராஜ்யசபா எம்.பி.யாகிவிடுவது என்பதில் சுதர்சன நாச்சியப்பன் மும்முரமாக இருக்கிறார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications