மருத்துவமனையில் கருணாநிதி: சிதம்பரம், ஈவிகேஎஸ், அன்புமணி நலம் விசாரிப்பு
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொண்டை மற்றும் நுரையிரல் நோய் தொற்றால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தொற்றால் மூச்சு விட கருணாநிதி சிரமப்படுவதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு பின் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் காவேரி மருத்துவமனைக்கு நேற்று மதியம் வருகை தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். பிறகு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கருணாநிதி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.
மாலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.தனுஷ்கோடி ஆதித்தன், எஸ்.ஆர்.எம். கண்ணய்யா உள்ளிட்டோர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications