சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற நீதிபதிகள் தயக்கம்- தலைமை நீதிபதி அகர்வால் பேச்சு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜேஷ்குமார் அக்ரவால் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் பேசியதாவது:
கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி இந்த புகழ் பெற்ற உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றேன். அப்போது, என்னை பாராட்டி வரவேற்பு கொடுத்தீர்கள். நான் இந்த நீதிமன்றத்தில் ஒரு அங்கம் என்று முடிவு செய்து பணியை தொடங்கினேன்.
ஆனால், திடீரென ஒரு நாள் காலையில், வழக்கறிஞர்கள் ஒரு சிலர் என்னை வெளிநபராக நடத்துகின்றனர் என்று உணர்ந்தேன். இதனால், நான் கடுமையான மனவேதனை அடைந்தேன். எதற்காக அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்று ஆராய்ந்தும், காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன், உங்களாலும் கண்டறிய முடியாது.
எனவே எனக்கு அந்த காரணத்தை நீங்கள் தெரியப்படுத்துங்கள். அதன்மூலம், நான் என்னை திருத்திக்கொள்கிறேன்.
அண்மையில் எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒரு நாள் என்னுடன் பணியாற்றும் சக நீதிபதி ஒருவர், என் மீது கடும் சொற்களை அள்ளி வீசியது மட்டுமல்லாமல், இந்த உயர்நீதிமன்றத்தின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தினார்.
இந்த உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் பல நீதிபதிகள் வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தங்களை பணிமாற்றம் செய்யும்படி என்னிடம் கேட்டனர். அதேபோல, வெளிமாநிலத்தில் பணியாற்றும் நீதிபதிகள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற தயக்கம் காட்டுகின்றனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பையும், கவுரவத்தையும் நாம் ஒன்றிணைந்து கடுமையாக உழைத்து, மீண்டும் நிலைநிறுத்த நாம் அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி அகர்வால் பேசினார்.












Click it and Unblock the Notifications