பாம்பனில் நடக்கும் பிரதமர் விழாவில் பங்கேற்காதது ஏன்? உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
உதகை: உதகையில் நடக்கும் விழாவில் பங்கேற்றுள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை போக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இந்த விழாவில் பங்கேற்காமல் உதகையில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் பாம்பன் பால திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி செய்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மிகப்பெரிய சதி நடக்கவிருப்பதை முதல்முதலாக உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தான் தமிழ்நாடு. மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக் கூடும்.
பிரதமருக்கு கடிதம்
இதுதொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதனடிப்படையிலான முடிவுகளின் படி, 7 மாநிலங்களைச் சேர்ந்த 22 கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறோம்.
பாம்பன் விழாவில் பங்கேற்காதது ஏன்?
அதற்காக நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். ராமேஸ்வரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருக்கிறார். நீலகிரி விழாவில் பங்கேற்றிருப்பதால், ராமேஸ்வரம் விழாவில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த சூழலை ஏற்கனவே அவரிடம் தெரிவித்துவிட்டோம். இதனால் ராமேஸ்வரம் விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோர் பங்கேற்றுள்ளார்கள்.
கோரிக்கை
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தை போக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பின் போது விகிதாச்சாரம் குறையக் கூடாது என்ற உறுதிமொழியை தமிழக மண்ணில் நின்று அளிக்க வேண்டும். அதற்கான அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications