'வீடியோ கால்' வாயிலாக பிரசவம் பார்த்த நர்சுகள்.. குழந்தை இறந்ததால் பரபரப்பு.. அதிரடி நடவடிக்கை!
செங்கல்பட்டு : மதுராந்தகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் வீடியோ காலில் பேசி செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது குழந்தை உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, செவிலியர்கள், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் யாரும் இல்லை என்பதால், செவிலியர்களே பிரசவம் பார்த்த நிலையில் சிக்கல் ஏற்பட்டதால், மருத்துவர் வீடியோ காலில் ஆலோசனை கூறியுள்ளார்.
அப்போதும் குழந்தையின் தலை வராததால் மதுராந்தகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் இதேபோல வீடியோ கால் வாயிலாக மருத்துவரின் ஆலோசனைப்படி விஜய் பிரசவம் பார்ப்பார். அதேபோல நடந்த சம்பவத்தில் குழந்தை இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அருகே
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி (36). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா (33) இரண்டாவது முறையாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவர் பிரசவ தேதி கொடுத்திருந்த நிலையில், வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் மதியம் பிற்பகலில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இல்லிடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புஷ்பாவை அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் இல்லை
அங்கு மருத்துவர்கள் யாருமில்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே 3 பேர் இருந்துள்ளனர். புஷ்பாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரசவத்தில் பிரச்சனை இருக்கிறது என குறிப்பிட்டிருந்துள்ளது. ஆனால் இதனை செவிலியர்கள் சரிவர கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்கேயே சுகப்பிரசவம் பார்த்துவிடலாம் என செவிலியர்கள் தெரிவித்ததன்படி மாலை 6 மணிக்கு தலைகீழாக குழந்தையின் கால்கள் மட்டுமே வந்துள்ளது. தலை வெளியே வரவில்லை

வீடியோ கால் மூலம்
இதனால் செய்வதறியாது தவித்த செவிலியர்கள் மற்றொரு மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர். 'நண்பன்' திரைப்பட பாணியில் வீடியோகால் வாயிலாக பிரசவத்தை செய்யும்படி மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவர் கூறிய ஆலோசனைப்படி செவிலியர்கள் முயற்சி செய்துள்ளனர். எனினும் குழந்தையின் தலைவெளியே வரவில்லை.

இறந்த நிலையில்
மேலும், புஷ்பாவின் உடல் நிலையும் மேலும் மோசமாகவே, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக புஷ்பாவை மேல்சிகிச்சைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே குழந்தை இறந்து பிறந்துள்ளது.

குடும்பத்தின போராட்டம்
இதனால் அதிர்ச்சியடைந்த புஷ்பாவின் குடும்பத்தினர், அவரை மருத்துமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் அலட்சியப் போக்கால் குழந்தை இறந்து பிறந்ததாக குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர் வாங்க மறுத்துவிட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவர் டிரான்ஸ்பர்
இது குறித்து விசாரணை நடத்திய பொது சுகாதாரத்துறை இயக்குநரகம், பணி நேரத்தில் இல்லாத மருத்துவர் பாலு என்பவரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications