ரோட்டில் வீசப்பட்டு மீட்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைப்பு
கோவை: கோவையில் ரோட்டில் வீசப்பட்ட இரண்டரை மாத ஆண் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து போலீசாரால் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கோவை நகரிலுள்ள திருச்சி சாலையில் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள தனியார் வணிக வளாகக் கட்டடம் அருகே ஒரு துணிப்பையில் போட்டு வைக்கப்பட்டிருந்த இரண்டரை மாத ஆண் குழந்தையை கடந்த ஜூன் 17 ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பொன்ராஜ், மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அந்த சிசுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தை உடல்நலம் பெற்று இயல்பு நிலைக்கு வந்தது. உடல் எடை சுமார் 2 கிலோ அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அந்த சிசுவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலமாக மருத்துவமனை டீன் எட்வின் ஜோ, தலைமை இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் ஆகியோர் கிணத்துக்கடவில் உள்ள "சரணாலயம்" என்ற குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.