இந்திய கடற்பரப்பில் சீனா கப்பல் ஊடுருவ முயற்சி- துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடிப்பு!
ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லைக்குள் சீனா கப்பல் ஊடுருவ முயற்சித்துள்ளது. ஆனால் இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சீனா கப்பலை விரட்டியடித்துள்ளனர்.
இலங்கையின் தெற்கில் சிங்களவர் பகுதியில் சீனா வலுவாக காலூன்றியுள்ளது. கொழும்பு மற்றும் அம்பந்தோட்டா துறைமுகங்களை சீனாவுக்கு கொடுத்துள்ளது இலங்கை.

திருகோணமலை உள்ளிட்ட தமிழர் வாழும் பகுதிகளில் இந்திய நிறுவனங்களை இலங்கை அனுமதித்துள்ளது. அதேநேரத்தில் சர்ச்சைக்குரிய கச்சத்தீவில் சீனா கடற்படை முகாமிட்டிருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழகம் மற்றும் இலங்கை வாழ் தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையுள்ள பகுதிகளில் சீனா மீன்பிடி படகுகளுக்கும் இலங்கை அனுமதித்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இந்திய கடற்பரப்புக்குள் சீனா கப்பல் ஒன்று நுழைய முயற்சித்துள்ளது.
இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் இந்த கப்பல் நுழைய முயற்சித்திருக்கிறது. இதையடுத்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் சீனா கப்பலை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சீனா கப்பலில் இருந்தவர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இருதரப்பு மோதலுக்குப் பின்னர் சீனா கப்பல் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்பரப்பில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஆனால் இது தொடர்பாக இந்திய கடற்படை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் இலங்கையில் முகாமிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications