ரகம் ரகமாய் வந்து குவிந்து பட்டாசு தொழிலையே ரணகளப்படுத்தும் சீனா பட்டாசுகள்...
விருதுநகர்: தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் சீனாவில் இருந்து ரகரகமாய் பட்டாசுகள் இந்தியாவிற்குள் பெருமளவு குவியத் தொடங்கியுள்ளன. இதனால் சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளி என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது பட்டாசுதான். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சுமார் 800 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் நேரடியாகவும் 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றன.
இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பிற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வரி வருவாய் கிடைத்து வருகிறது. இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் இரவு பகலாக வேலை நடந்து வருகிறது.
இந்நிலையில், சீனாவில் இருந்து ரகம் ரகமாக பொம்மைகள், ஸ்கிராப், பழைய இரும்பு, என பெயர் மாற்றி 2 ஆயிரம் கன்டெய்னர்களில் முறைகேடாக பல்வேறு துறைமுகங்களில் வந்து இறங்கியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், வட மாநில ஆர்டர்களும் இதுவரை அதிக அளவு அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வட மாநிலங்களில் பட்டாசு விற்பனை மிகவும் மந்தமாக உள்ளதால் 40 சதவீதம் வரை விற்பனை பாதித்துள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சீன பட்டாசு வருகை காரணமாக சிவகாசி பட்டாசு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதனிடையே சீன பட்டாசுகளை பிடித்துக் கொடுத்தால், 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என, தமிழ்நாடு பட்டாசு தொழில் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது. மேலும், சீன பட்டாசு விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், மத்திய பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு நிறுவனமான, 'பெஸோ' கடிதம் எழுத உள்ளது. சென்னை உயர் நீதிமன்றமும், சீன பட்டாசுகளை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலான சீன பட்டாசுகள், இந்திய வெடிபொருள் சட்டம் - 2008 விதிமுறைக்கு மாறாக, அதிக அளவு நச்சு தன்மை கொண்டவையாக, ஒலி மாசு ஏற்படுத்துபவையாக உள்ளன. அதனால், சந்தையில் சீன பட்டாசுகள் விற்பனையாவதை தடுக்க, தீவிர நடவடிக்கையை துவங்கி உள்ளோம். இது தொடர்பாக மாவட்டந் தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும்; அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், கடிதம் எழுத உள்ளோம் என்று பெஸோ அதிகாரிகள் தெரிவித்தனர்.