சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராதிகா
சென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து நடிகை ராதிகா ராஜினாமா செய்துள்ளார். ராதிகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது சுஜாதா தலைவராக(பொறுப்பு) இருந்து வருகிறார்.
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இச்சங்கத்தின் தலைவராக ராதிகா சரத்குமார் கடந்த 2011ம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த 2014ம் ஆண்டு இச் சங்கத்தின் தலைவராக ராதிகாவும் செயலாளராக நடிகை குஷ்பு போட்டியின்றி மீண்டும் தேர்வானார். சங்கத்தின் பொருளாளராக டி.ஆர். பாலேஸ்வர், துணைத்தலைவர்களாக குட்டி பத்மினி, சுஜாதா விஜயகுமார், இணை செயலாளர்களாக இ.ராமதாஸ், டி.வி.சங்கர் ஆகியோரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக பி.ராதா, சுஜாதா கோபால், பி.சீனிவாசன், மனோபாலா, சீனிவாசலு, மதி ஒளி குமார், வெங்கடாச்சலம், ஜெயக்குமார், செய்யாறு ரவி, வினயா கிருஷ்ணன், ஜெயவேல், சதீஷ் ஆகியோர் தேர்வானார்கள்.
சங்கத்தின் காப்பாளர்களாக ஏ.வி.எம். சரவணன், டி.ஜி.தியாகராஜன், அழகன் தமிழ்மணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்ற போது கணவர் சரத்குமாருக்கு ஆதரவாக சின்னத்திரை நடிகர்களிடம் ஆதரவு திரட்டினார் ராதிகா. இதேபோல செயலாளர் குஷ்பு எதிரணியான விஷால் பக்கம் நின்றார். இதிலிருந்தே குஷ்புவிற்கும், ராதிகாவிற்கும் பிரச்சினை உருவானதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் ராதிகா. ராதிகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது சுஜாதா தலைவராக(பொறுப்பு) இருந்து வருகிறார்.