பச்சைப்பட்டுடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்: விண்ணை எட்டிய கோவிந்தா முழக்கம்
மதுரை : கள்ளழகர் பச்சைப் பட்டுடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு அழகரை தரிசனம் செய்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று காலையில் நடைபெற்றது. தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் இருந்து பச்சைப்பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பரிவட்டத்துடன் தங்கக்குதிரை வாகனத்தில் கிளம்பிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் கரையில் திரண்டு நின்று, கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றியும், பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
சித்திரை திருவிழா
அழகர்மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கள்ளழகர் ஆண்டு தோறும் சித்ரா பெளர்ணமி அன்று மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார். இத்திருவிழா புராணகாலந்தொட்டே நடந்துவருகிறது. சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது.

எதிர்சேவை
இந்த வைபவத்துக்காக புதன்கிழமை மாலை அழகர் மலையிலிருந்து ஸ்ரீகள்ளழகர் தோளுக்கினியனாக தங்கப் பல்லக்கில் புறப்பாடானார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி வழியாக வந்த கள்ளழகர் வியாழக்கிழமை காலை மூன்றுமாவடி வந்தார். அங்கு ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த பொதுமக்கள் சொம்பில் நிரம்பிய சர்க்கரையில் தீபம் ஏற்றி வரவேற்று வழிபட்டனர்.

வழி எங்கும் வரவேற்பு
பின்னர் அங்கிருந்து புறப்பாடான கள்ளழகர் தனியார் மண்டகப்படிகளில் எழுந்தருளியவாறு புதுநத்தம் சாலையில் உள்ள ஊரக காவல் கண்காணிப்பாளர் இல்லம், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்டவற்றில் எழுந்தருளி மாலை 4 மணிக்கு அழகர்கோவில் சாலை அம்பலகாரர் மண்டகப்படி பகுதிக்கு வந்தார் வழியெங்கும் கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பச்சைப்பட்டு உடுத்தினார்
இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலுக்குள் கள்ளழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமான பின்னர், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அவருக்கு நாட்டின் நலனை குறிக்கும் பச்சைப் பட்டாடை சார்த்தப்பட்டது.

புறப்பட்ட அழகர்
இதையடுத்து தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் அருகே இருந்த ஆயிரம்பொன் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து, வைகை ஆற்றை நோக்கிப் புறப்பாடானார். கள்ளழகரை தல்லாகுளம், கோரிப்பாளையம் பகுதிகளில் விடிய, விடிய குழுமியிருந்த பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

விழாக்கோலம் பூண்ட மதுரை
கருப்பணசாமி, அழகர் வேடமணிந்த பக்தர்கள் திரியாடியும், தண்ணீர் பீய்ச்சியடித்தும் சலங்கை அணிந்தபடி வலம் வந்தனர். இதனால், தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. மதுரை நகர் மட்டுமன்றி கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கள்ளழகரை தரிசிக்க காத்திருந்தனர்.

ஆற்றில் இறங்கினார்
காலை 6.45 மணியளவில் பச்சைப்பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பரிவட்டத்துடன் தங்கக்குதிரை வாகனத்தில் ஆடி அசைந்து வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றின் கரையில் திரண்டு நின்று, கோவிந்தா.. கோவிந்தா என்ற கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். சர்க்கரைக் கிண்ணத்தில் தீபம் ஏற்றியும், பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

போலீஸ் பாதுகாப்பு
கள்ளழகர் புறப்பாட்டையொட்டி, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி தலைமையில், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 20க்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு, போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications