சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவு... தனிப்படை அமைத்து தேடுகிறது போலீஸ்!
திரைப்பட இயக்குனர் சசிகுமார் மைத்துனர் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : திரைப்பட இயக்குனர் சசிகுமார் மைத்துனர் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குனர் சசிகுமாரின் மைத்துனரும் நெருங்கிய நண்பருமான அசோக்குமார் நேற்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை நடந்த வீட்டில் இருந்து போலீசார் அசோக்குமாரின் தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதற்காக மிகவும் நெருக்கடியை சந்தித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும் சசிகுமார் நல்லவர் என்றும், அவருக்கு பிறரால் துன்பம் மட்டுமே நேர்வதாகவும் அசோக் தெரிவித்திருந்தார். அன்புச்செழியனிடம் வாங்கிய கடனுக்காக மிகுந்த நெருக்கடியைத் தருவதாகவும், இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாகவும் அசோக்குமார் கடிதத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசோக்குமார் தற்கொலையை அடுத்து அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து அவரைத் தேடும் பணியில் சென்னை வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அன்புச்செழியனை உடனடியாக கைது செய்ய தனிப்படை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.