ரூ25 லட்சம் லஞ்சம் கேட்கும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்- அரசு வக்கீலின் அதிரடி புகாரால் பரபரப்பு!
தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சேதுராமன் மீது அதிமுகவை சேர்ந்த அரசு வக்கீலே லஞ்சப் புகார் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சேதுராமன் மீது அதிமுகவை சேர்ந்த அரசு வக்கீலே லஞ்சப் புகார் கூறப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சேதுராமன் மீது சட்ட அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெகன், சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 'அரசு வழக்கறிஞர் பணியில் நான் தொடர வேண்டுமானால் ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று சேதுராமன் கேட்கிறார்' என்று குற்றம் சாட்டி புகார் தெரிவித்துள்ளார். ஜெகன் கடந்த 7 ஆண்டுகளாக சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் பணியில் இருக்கிறார்.
மேலும் ஜெகன் தனது கடிதத்தில் சேதுராமன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லையென்றால் அது அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படுத்திவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி மீனாட்சியிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டினார் என்று புகார் கூறப்பட்டது. அதனை குழந்தைகள் நல அதிகாரி மீனாட்சியே ஊடகங்கள் முன்னிலையில் வெளிச்சமிட்டுக் காட்டினார்.
அதே போல இன்னும் பல அமைச்சர்கள் மீதும் புகார்கள் எழுந்தவண்ணமுள்ளன. ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், பொதுமக்கள் மத்தியில் ஆளும் அதிமுக அரசு மீது நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில் நீதித்துறையில் லஞ்சப் புகார் குரல்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications