துப்பாக்கிச் சூடு... வரும் 9-இல் தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் பழனிச்சாமி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிறகு வரும் 9-ஆம் தேதி தூத்துக்குடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்கிறார்.
சென்னை: துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வரும் 9-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி செல்கிறார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் கடந்த 22-ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது 144 தடையை மீறி பேரணி சென்ற மக்களை போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஒரு வாரம் 144 தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 27-ஆம் தேதி அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து மே 28-ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆனால் முதல்வர் சம்பவ இடத்துக்கு செல்லாதது விமர்சனத்துக்குள்ளானது.
இந்நிலையில் நாளை மறுதினம் (ஜூன் 9) அவர் தூத்துக்குடி செல்கிறார். அங்கு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.












Click it and Unblock the Notifications