உங்கள் பேருந்து... உங்கள் நிறுவனம்... நீங்கள்தான் (மக்கள்) சரி செய்ய வேண்டும்... முதல்வர் விளக்கம்
வேதனையுடன் பேருந்து கட்டணத்தை உயர்த்தினோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சென்னை: மிகவும் மன வேதனையுடன்தான் பேருந்து கட்டணத்தை ஏற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
66 சதவீத கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். ஆங்காங்கே மறியல்களும் நடத்தப்பட்டன. அரசியல் கட்சியினரும் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை திநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது.
பேருந்துகள் மக்களுக்கானது, இது மக்களுக்கான நிறுவனம். எனவே இதை மக்கள்தான் சரி செய்ய வேண்டும்.
பேருந்து கட்டணம் சரி செய்ய முடியாதது. மிகவும் மன வேதனையுடன்தான் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தினோம். மக்கள் இதை ஏற்றுக் கொண்டு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.