காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
Recommended Video
கோவை: காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்ய இயலாது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
15 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட காவிரி வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இது காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை காட்டிலும் 14.75 டிஎம்சி குறைவானதாகும். இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் காவிரி வழக்கில் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது. காவிரி ஆற்றை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
தீர்ப்பு குறித்து சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர் முடிவு எடுப்பார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்ய இயலாது. காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளேன்.
காவிரி மேலாண்மை வாரியம், காவிரி முறைப்படுத்தும் குழுவை 6 வாரத்தில் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. காவிரி தீர்ப்பில் சில விஷயங்கள் வரவேற்கத்தக்கது; சில விஷயங்கள் ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர்.