கருணாநிதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்தார். அவருடன் துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
கருணாநிதி உடல்நல குறைவுகளால் நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 95. காவேரி மருத்துவமனையிலிருந்து அவரது உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடல் சிஐடி காலனியில் உள்ள இல்லத்துக்கு சென்றது. அங்கும் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அவரது உடல் சிஐடி காலனியிலிருந்து ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலும் மறைந்த தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திமுக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் முதல்வர்.