சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்- முதல்வர் விளக்கம்
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்தார்.
Recommended Video
சென்னை: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காகவும் ஆலைக்கு சீல் வைத்தோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது.
இந்நிலையில் இந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதில் சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து அந்த அரசாணை நகலுடன் ஆலைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைத்தார். இதுகுறித்து சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் , சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததால் ஸ்டெர்லைட் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டை மூட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. மக்கள் உணர்வை மதித்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது.
தூத்துக்குடியில் போராடிய மக்களின் கோரிக்கைக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தோர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினாலும் அரசு ஏற்பாடு செய்யும் என்றார் அவர்.