திரைப்பட செய்தியாளர்கள் பிரச்சினை என்ன?- செயலரிடம் விசாரித்த முதல்வர்
கடந்த சில தினங்களாக திரையுலகில் நிலவும் இறுக்கமான சூழல், செய்தியாளர்கள் பிரச்சினை பற்றி செய்திகளைப் பார்த்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, இதுகுறித்து தனது செயலாளரிடம் விசாரித்துள்ளார்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், திரைப்பட செய்தியாளர்களின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில், சில விஷயங்களை வாய் மொழி உத்தரவாக வெளியிட்டனர்.
செய்தியாளர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பெரும்பான்மைப் பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்க முயற்சி செய்தனர். இதைத் தொடர்ந்து, ஒன்றுபட்ட அனைத்து சினிமா செய்தியாளர்களும், திரைப்பட நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடக்கவிருந்த பல்வேறு நிகழ்வுகள் ஒத்திப் போடப்பட்டுள்ளன. நேற்று சென்னையில் நடந்த மூன்று சினிமா நிகழ்ச்சிகளைப் பத்திரிகையாளர்கள் புறக்கணித்தனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து தனது செயலாளர் ராம்மோகன்ராவை அழைத்து விவரங்கள் கேட்டுள்ளார் முதல்வர்.
இந்த பிரச்சனை குறித்து சில மூத்த அரசியல் நிருபர்களும் முதல்வர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.