காவிரி விவகாரத்தில் எடப்பாடி- ஸ்டாலின் ஆலோசனை வரவேற்கத்தக்கது : தா.பாண்டியன்
காவிரி விவகாரத்தில் முதல்வரும், எதிர்கட்சித் தலைவரும் சந்தித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு : காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது வரவேற்கத்தக்கது என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் உள்ள சி.என்.சி கல்லூரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்துகொண்டார்.

அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகள் ஏற்புடையதல்ல என்றும், இந்த விவகாரத்தில் தமிழகத்தின் நலன்கள் பாதிக்கப்படாதவாறு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. இதுபோல் அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்படவேண்டும் என்றார்.
வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதிலாக நம் நாட்டில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது அவமானமாக உள்ளது. இதைத் தடுக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தா.பாண்டியன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications