தலைமை செயலகத்தில் சபாநாயகருடன் முதல்வர் திடீர் சந்திப்பு!
தலைமை செயலகத்தில் சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆலோசனை செய்தார்.
சென்னை: சட்டசபை உரிமை குழு கூட்டம் தொடர்பாக சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு காட்டுவதற்காக திமுக உறுப்பினர்கள் சட்டசபைக்கு கடந்த ஜூலை 19-ஆம் தேதி கொண்டு சென்றனர்.
தடை செய்யப்பட்ட பொருளை பேரவைக்குள் கொண்டுவரக்கூடாது என்ற விதிமுறையை காரணம் காட்டி, ஸ்டாலின் உட்பட 20 திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமைமீறல் பிரச்சினை கொண்டுவந்து, அதுகுறித்து பரிசீலிக்க சட்டசபையின் உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.
சட்டசபை உரிமை மீறல் குழு கூட்டம் இன்று கூடவுள்ள நிலையில் சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அவர் சட்டசபை உரிமை குழுக் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.