போயஸ் கார்டனில் ஓபிஎஸ், அமைச்சர்கள்: சசிகலாவுடன் ஆலோசனை
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்கு வந்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சசிகலாவும் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவுச் சின்னமாக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது தமிழகம் முழுக்க எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் கடைக்கோடி தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் போயஸ் இல்லத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் போயஸ் கார்டன் நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் வாசல் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்னதாக, ஜெயலலிதா பொதுமக்களை சந்திக்கும் அதே இடத்தில் தற்போது சசிகலா நின்றுகொண்டு வந்திருந்த பொதுமக்களிடம் பேசினார்.
இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் இருந்தனர். சசிகலா உடன் முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.