சசிகலா குடும்பத்திற்கு அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் முதல்வர் பழனிசாமியின் அதிரடிகள்!
மறைந்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது, சசிகலா குடும்பத்தினருக்கு மேலும் ஒரு அடியாக விழுந்துள்ளது.
சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் போயஸ் தோட்ட வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளது சசிகலா குடும்பத்தினருக்கு அடிமேல் அடியாக விழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் 5ம் தேதி மறைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாள் முதல் 72 நாட்கள் அப்பலோ மருத்துவமனையில் நடந்த விஷயங்கள் வெளிவராமலே இருந்தன.
அதிமுக ஒரே கட்சியாக இருந்த போது ஜெயலலிதாவிற்கு உரிய சிகிச்சையளிக்கப்பட்டதாக சசிகலா குடும்பத்தினர் சொல்வதைக் கேட்டு அதிமுகவினரும் தலையசைத்தனர்.
நீதி விசாரணை
ஆனால் பிப்ரவரி 7ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக உருவான போது ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று தர்மயுத்தம் என்ற பெயரில் ஒத்துழையாமை போராட்டத்தை தொடங்கினார்.
முதல்வர் அதிரடி
அதிமுகவின் இரண்டு அணிகள் சேர முட்டுக்கட்டையாக இருக்கும் விஷயங்கள் இதுவே என்று வெளித் தோற்றத்தில் அனைவரும் கூறினர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாவும் அதிமுகவினர் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விஷயங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.
அடுத்தடுத்த அடி
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து விளக்கவில்லையென்றாலும் தினகரனின் நியமனம் செல்லாது என்றும் ஜெயலலிதாதான் பொதுச்செயலாளர் என அறிவித்து பரபரப்பை கிளப்பினர் முதல்வர் பழனிசாமி. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்த விசாரணை நடத்தப்படும் என்றும், மேலும் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இணைப்புக்கு சாதகம்
ஏற்கனவே கட்சியில் சசிகலா குடும்பத்தை சேர்ந்த டிடிவி.தினகரனை விலக்கி ஷாக் கொடுத்த பழனிசாமி, தற்போது நீதி விசாரணை என்ற அடுத்த அஸ்த்திரத்தை இறக்கி, இருஅணிகள் இணைப்புக்கு இசைவான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளார். இதனால் விரைவில் இரு அணிகள் இணையும் சூழல் உருவாகியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.