நாங்களும் சந்திப்போம்ல… மோடி- பழனிச்சாமி பரபர சந்திப்பு... அரசியல் குறித்து முக்கிய ஆலோசனை
டெல்லி சென்றுள்ள முதல்வர் பழனிச்சாமி இன்று மோடியை சந்தித்தார். இதில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். ஜனாதிபதி தேர்தல் வர உள்ளதால், அரசியல் குறித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 19-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, வி.மைத்ரேயன் எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றனர்.
அப்போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை குடிநீர் தட்டுப்பாடு, வறட்சி நிவாரணம், விவசாயக் கடன் தள்ளுபடி, நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தவே பிரதமரை சந்தித்ததாக ஓபிஎஸ் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல்
ஆனால், டெல்லி சென்று வந்த 2 நாட்களில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி பாஜகவிற்கு ஆதரவளிக்கும் என்று டுவிட்டரில் தகவல் பதிவிட்டப்பட்டது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்லி பயணம்
பரபரப்பான இந்தச் சூழலில், பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இன்று காலை 11.30 மணிக்கு பிரதமரை முதல்வர் சந்தித்தார்.

என்ன கோரிக்கை
இந்த சந்திப்பின்போது வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மேலும், நீட் தேர்வு உள்ளிட்ட பிரச்சினைகள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், விவசாயிகள் பிரச்சனை குறித்து பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிச்சாமி விவாதித்ததாக கூறப்படுகிறது. அவருடன் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல்
மோடியுடனான சந்திப்பில், ஜூலை மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் அது குறித்து பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ் டெல்லி சென்று மோடியை சந்தித்து பேசி வந்த பின்னர், அதற்கு போட்டியாக பழனிச்சாமி சென்று சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications