குடியரசு தின விழா… அமைதியாக விருது வழங்கிய ஓ.பன்னீர் செல்வம். உணர்ச்சியின்றி காணப்பட்ட அமைச்சர்கள்!
சென்னை: குடியரசுத் தினவிழாவை ஒட்டி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், 5 போலீசாருக்கு வீரதீர செயல்களுக்கான அண்ணா பதக்கத்தையும், நான்கு போலீசாருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கத்தையும் வழங்கி கவுரவித்தார்.
சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படையின் அணிவகுப்பை ஆளுநர் ரோசய்யா ஏற்றார்.
அதனைத்தொடர்ந்து, சாதனையாளர்களுக்கு பல்வேறு வகையான விருதுகளை வழங்கி முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வழங்கினார்.

5 பேருக்கு அண்ணா பதக்கம்
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தை சிவகுமார், பழனிவேல் ராஜன், ராஜபூபதி, பார்த்தசாரதி, கந்தசாமி உள்ளிட்ட 5 காவலர்களுக்கு வழங்கினார். தங்கமுலாம் பூசிய பதக்கத்தை அணிவித்த முதல்வர், சான்றிதழுடன் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கி கவுரவித்தார்.

மதநல்லிணக்க விருது
ராமநாதபுரத்தைச் சேர்ந்த துல்கருணை பாட்சாவிற்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவலர் பதக்கம்
மதுஒழிப்பில் சிறப்பாக பணியாற்றதற்காக பாலகிருஷ்ணன், சண்முகம், பத்மாவதி,பாபு ஆகிய நால்வருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.

வேளாண் விருது
ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த விவசாயி துரைசாமிக்கு வேளாண்துறை சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஜெ. ஸ்டைல் விருது
கடந்த ஆண்டு முதல்வர் பதவியில் இருந்த ஜெயலலிதா, குடியரசு தினவிழாவில் பங்கேற்க கடற்கரைக்கு வரும் போது கலங்கரை விளக்கம் வரை அவரது கார் வந்து திரும்பும். மக்களை பார்த்து கையசைத்த படி சென்று காந்தி சிலை முன்பு இறங்கி ஆளுநரை வரவேற்க காத்திருப்பார். வீர தீர செயல்களுக்கான விருதுகளை உற்சாகமாக வழங்குவார்

வழக்கமான உற்சாகம் இல்லை
ஆனால் இன்றைய விழாவில் வழக்கமான உற்சாகத்தைக் காண முடியவில்லை. தற்போது முதல்வராக உள்ள ஓ. பன்னீர் செல்வம் நேரடியாக காந்திசிலைக்கு வந்து ஆளுநரை வரவேற்க காத்திருந்தார். ஆளுநர் கொடியேற்றிய உடன் சாதாரணமாக விருதுகளை வழங்கினார். அமைச்சர் பெருமக்களும் எந்த வித உணர்ச்சிகளும் இன்றி நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.












Click it and Unblock the Notifications