8 கோடி மக்களை விடவா "அவருக்கு" அதிகாரமா?.. கேரளாவிலும் விடாமல் கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
கண்ணனூர்: மாநில அரசுகள் தலையாட்டி பொம்மைகளாக இருந்திருந்தால் எந்த பிரச்சினையும் இருக்காது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த மாநாடு இன்று முடிவடைகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில் ஆங்கிலேயர் ஆட்சியில் கூட ஒற்றை அதிகாரம் இல்லை. ஆனால் ஒன்றிய அரசு , கிராமங்களில் உள்ள அதிகாரங்களை கூட கைப்பற்ற முயற்சிக்கிறது.

பழிவாங்குதல்
மாநிலங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்குகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் வருவாய் பறிக்கப்பட்டது. மாநிலங்களின் பிரச்சினைகளை முறையிடும் திட்டக்குழு, தேசிய வளர்ச்சிக் குழுவை மத்திய அரசு கலைத்துவிட்டது. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பெரும்பான்மை
பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எல்லா சட்டங்களையும் மத்திய அரசே நிறைவேற்றுகிறது. 8 கோடி மக்களைவிட ஆளுநருக்கு அதிகாரமா, பெரும்பான்மையோடு வென்ற அரசு இருக்கும் போது ஆளுநரை வைத்து ஆட்சியை நடத்த முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநரை வைத்து மசோதாக்களை கிடப்பில் போடுகிறார்கள்.

பினராயி விஜயன்
தமிழக முதல்வரான நானும் கேரள முதல்வரான பினராயி விஜயனும் தலையாட்டி பொம்மையாக இருந்தால் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. மாநிலங்களின் உரிமைக்காக போராட முதலில் தென்மாநிலஹ்களின் முதல்வர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகத்தை நிலைநிறுத்த கொள்கை அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இரண்டாவது முறையாக நீட் விலக்கு மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி கொடுத்தும் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என திமுக அரசு புகார் கூறுகிறது. ஆர் என் ரவி மீதான புகார் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களால் எடுத்து வைக்கப்பட்டு ஆளுநரை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications