“எங்க உசுருக்குப் பாதுகாப்பு தந்தவர் ஸ்டாலின்” - பூட்டிக் கிடந்த சங்கத்தை மீட்டுக் கொடுத்த முதல்வர்
திருவண்ணாமலை: கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்படாமல் முடங்கிக் கிடந்த இருளர் பழங்குடி இன சங்கத்திற்கு புதிய ரத்தத்தைப் பாய்ச்சி உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தைப் பெற்றுள்ளனர். இப்போது சுயமாகச் சொந்தக் காலில் நின்று, தொழில் செய்து வருமானம் ஈட்டி சுயமரியாதையை நிலைநாட்டி உள்ளனர். இதற்காக முதல் விதையை ஸ்டாலின் விதைத்துள்ளார்.

60 குடும்பங்களின் மகிழ்ச்சி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது கெங்காபுரம் கிராமம். இங்குக் கிட்டத்தக்க 60 இருளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். பாம்பு பிடிப்பதுதான் இவர்களின் பூர்வீக தொழில்.
இவர்கள் பிடிக்கின்ற பாம்புகளிலிருந்து விஷம் எடுத்து அதை, கூட்டுறவுச் சங்கத்தில் அளித்து வருவாய் பெற்று வாழலாம் எனக் கடந்த 2018 ஆண்டு ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளனர்.
ஆனால், சங்கம் உருவானதுடன் உருவம் தெரியாமல் மறைந்துவிட்டது. கடந்த கால ஆட்சியில் எவ்வளவோ முயன்றும் இச்சங்கத்திற்கு அரசு உதவவில்லை என்கிறார்கள் அப்பகுதி இருளர் மக்கள்.
"இருளர் மக்கள் அனைவரும் ஏரிக்கரையிலும் குட்டைக்கரையிலும் தான் வாழ்ந்துவருகிறார்கள். அப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒரு சில குடும்பங்கள் தான் வாழ்ந்துவருவார்கள்.
அவர்களை ஒருகுடையின் கீழாக ஒருங்கிணைக்கவே எங்களுக்கு 2 ஆண்டுகள் வரை செலவானது" என்கிறார் இருளர் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார தொழில் கூட்டுறவுச் சங்கத்தைச் சேர்ந்த சேகர்.
"இப்படி நாங்கள் ஒருங்கிணைத்த மக்களைக் கூட்டி ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கூட்டம் போடுவோம். அப்போது எங்கள் மக்களின் தேவைகள் என்ன? அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? என்பதைப் பற்றி ஆலோசனை செய்வோம்.

சட்டத்தால் முடங்க இருந்த தொழில்: இந்த மக்களுக்குப் பாம்பு பிடிப்பதுதான் தொழிலாகக் காலங்காலமாக இருந்துவந்தது. 1982இல் பாம்பு பிடிப்பதற்கு எதிராகச் சட்டம் வந்துவிட்டது.
அதற்கு முன்பாக பாம்புகளைப் பிடித்துக் கொன்று அதன் தோல் போன்ற பொருட்களை விற்பனை செய்வார்கள். இந்தத் தடையால் பாம்பைக் கொல்வது என்பது சட்ட விரோதமாகிவிட்டது.
அந்தச் சட்டத்தால் எங்கள் தொழில் நசுங்கிவிடும், வாழ்வாதாரம் இல்லாமல் போய்விடும் என நீதிமன்றத்தில் வழங்குத் தொடர்ந்தோம். அந்த வழக்கில், 'பாம்பைப் பிடித்து அதன் விஷத்தை எடுத்துக் கொண்டு, மீண்டும் அதை உயிருடன் விட்டு விடுகிறோம்' என உறுதி அளித்தோம். அதன்பின் உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
பாம்பு பிடித்து விஷத்தை எடுப்பதற்காக முன்பே செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு சங்கம் இயங்கி வருகிறது. இப்போது திருவண்ணாமலை கெங்காபுரத்தில் ஒரு சங்கத்தை உருவாக்கி உள்ளோம்.

32 லட்சம் நிதி அளித்த முதல்வர்: இதற்காக அனைவரையும் உறுப்பினராக்கி, தேர்தல் நடத்தி தலைவரையும் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். பாம்பு பிடிப்பதற்காக வனத்துறையிடம் இருந்து, மாவட்ட ஆட்சியர் அனுமதியோடு சான்றுகள் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
முதலில் 32 லட்சம் கொடுத்தார்கள். ஒரு கட்டடம் மற்றும் குடிநீர்த் தொட்டி, கூடவே ஒரு போர்வெல் ஆகிய அனைத்து வசதிகளை உருவாக்க இந்த நிதி தரப்பட்டது" என்கிறார்
இந்த வட்டாரத்தில் கிடைக்கும் நல்ல பாம்பு, கட்டுவிரியான், கண்ணாடி விரியான், சுருட்டை விரியான் போன்ற பாம்புகளைப் பிடித்து சங்கத்திற்குக் கொண்டுவந்துவிடுவோம். அவைகளை 22 நாள்கள்தான் வைத்திருக்க அனுமதி உண்டு. வாரத்தில் ஒரு நாள் வீதம் பாம்புகளிடம் இருந்து விஷம் எடுத்துக் கொண்டு, அந்தப் பாம்புகளை வனத்துறை அதிகாரிகளிடம் திரும்பக் கொடுத்துவிடுவோம்" என்கிறார்
இந்தப் பாம்புகளிடம் இருந்து விஷயத்தை எடுத்த பின், அதற்காகக் கருவிகளைக் கொடுத்துள்ளனர். அதில் விஷத்தை நிரப்பி, பின்னர் அதைப் பொடியாக மாற்றுகிறார்கள். இதை விற்றுதான் அரசிடம் இருந்து பணம் பெறுகிறார்கள். இதற்காக, ஆய்வுக்கூடம், பாம்புகள் வைக்கத் தொட்டி, பாம்புகளைப் பாதுகாக்கப் பானைகள் எனப் பலவற்றையும் அரசு வழங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டின் 2வது ஸ்பாட்: இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், "இந்த இருளர் சங்கம் 2018 தொடங்கப்பட்டது. ஆனால், இது பெரியதாக இயங்கவில்லை. எந்த வேலைகளும் நடைபெறவில்லை. இந்தக் குறைகள் அதிகாரிகளின் பார்வைக்கு வந்தது. அதனை ஏற்று முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.
முதல்வரின் ஒப்புதலுடன் 2021 ஆண்டு, சங்கத்திற்கு மீண்டும் ஒரு செயல்வடிவம் கொடுக்கப்பட்டது. இதற்காக 32.5 லட்ச ரூபாய் 'தமிழ்நாடு புதுமை முயற்சி திட்ட'த்தின் நிதியை ஒதுக்கிக் கொடுத்தோம். அந்தச் செலவில் இடம் ஒதுக்கப்பட்டது. அங்குச் சங்கக் கட்டடமும் கட்டித் தரப்பட்டது.
மேலும் இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதற்கான உபகரணங்கள், விஷத்தை எடுத்துப் பாதுகாப்பதற்கான குளிர்சாதன வசதிகள் என அனைத்தும் வழங்கப்பட்டன. அவர்களுக்காக இடமும் ஒதுக்கித்தரப்பட்டது.முறையாக இந்தச் சமுக மக்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் இச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா நடைபெற்றது. இப்போது இந்தச் சங்கம் முழு வீச்சுடன் இயங்கி வருகிறது.
இந்த மாதிரியான பாம்பு விஷயம் எடுப்பதற்குத் தமிழ்நாட்டில் மொத்தம் 2 இடங்கள் உள்ளன. அதில் இது இரண்டாவது இடம். சென்னையில் முட்டுக்காடு பகுதியில் ஒன்று முன்பே இயங்கி வருகிறது.

சட்டரீதியாகப் பாம்பு பிடிக்க உரிமம்: இதுவரை சட்டவிரோதமான அரசு சான்று இல்லாமல் செய்துவந்தார்கள். அதை முற்றிலுமாக தடுத்துள்ளோம். இதுவரை பாம்பு பிடிப்பதற்காக அரசு உரிம சான்று 80 பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த உரிம சான்று இல்லாததால் அவர்கள் பயந்து பயந்து செய்து வந்தார்கள். அரசு சான்று அளித்ததால் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் இந்தத் தொழிலை இருளர் இன மக்கள் செய்துவருகிறார்கள் " என்கிறார்
தமிழ்நாடு அரசு 32 லட்சம் வரை செலவழித்து இந்தச் சங்கத்தை உருவாக்கிக் கொடுத்த பிறகும், இந்த மக்கள் தங்கள் சங்கத்திற்கு வாகன வசதி தேவை என ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். அதை மனதில் வைத்து ஆட்சியர் தனது விருப்ப நிதியிலிருந்து 7 லட்ச ரூபாயை அளித்து வாகனமும் வாங்கப்பட்டுள்ளது.
இது இல்லாமல் பாம்பு பண்ணையில் சுற்றிலும் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி என அனைத்தையும் செய்துள்ளார் ஆட்சியர். அத்தனைக்கும் முதல்வர் ஸ்டாலினின் முழு ஒத்துழைப்பு கிடைத்துள்ளது என்கிறார் ஆட்சியர்.
இந்த அங்கத்தின் தலைவரான தெய்வானை," எங்கள் சங்கத்தில் 150 இருளர் இன மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்குத் தமிழ்நாடு அரசும் முதல்வர் ஸ்டாலின் அய்யாவும் பெரிய அளவில் உதவிகளைச் செய்து கொடுத்துள்ளனர். அதற்காக எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இடம் இருந்து வீடு இல்லாதவர்களுக்கு வீடு கொடுத்துள்ளார்கள். இடமே இல்லாதவர்களுக்கு இடத்தையும் கொடுத்து வீடும் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

இருளர் பிள்ளைகளுக்குக் கல்வி: படிக்காத இருளர் பிள்ளைகளைப் பற்றிக் கணக்கெடுப்பு எடுத்து அவர்கள் ஏன் படிக்கவில்லை எனக் கண்டறிந்து அவர்களைப் பள்ளியில் படிக்க வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள்.
மேல் படிப்புக்குப் போக முடியாதவர்களைக் கண்டறிந்து பொருளாதார உதவி செய்து படிக்க வைத்துள்ளார்கள். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்குப் பல உதவிகளையும் அரசு சார்பாகச் செய்து தந்துள்ளார்கள்" என்கிறார்.
"இதுவரை அரசு சார்பில் 60பேர்களுக்கு விலை இன்றி வீட்டுமனை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 100 நபர்களுக்கு இருளர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது" என்கிறார் பாலமுருகன்
இருளர் வித்யா, தனது கணவருடன் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கணவருடன் அவர் தினமும் பாம்பு பிடிக்கச் செல்கிறார். "முன்பு எல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
இப்போது எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மருத்துவக் காப்பீடு செய்துள்ளார். பாம்பு பிடிக்க சட்டரீதியாகச் சான்றிதழ் அளித்துள்ளார். ஆகவே நிம்மதியாகச் செய்கிறோம். எங்கள் பின்னால் சங்கம் இருக்கிறது. அதைவிட இந்த அரசு இருக்கிறது" என்கிறார்












Click it and Unblock the Notifications