சிம்லாவுக்கு அடுத்து நம்ம ஊட்டி.. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
உதகை: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 700 படுக்கை வசதி, பழங்குடியினருக்கு தனி வார்டு, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்பட பல்வேறு வசதிகளோடு 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை இன்று திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
நேற்று சென்னையில் இருந்து கோவை மார்க்கமாக உதகைக்குச் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள தமிழ்நாடு மாளிகையில் தங்கினார். தொடர்ந்து திமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் இரவு 8 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு மாளிகைக்கு சென்று தங்கினார்.

ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
இன்று காலை ஊட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார். சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற பெருமையை நீலகிரி மருத்துவக் கல்லூரி பெற்றுள்ளது.
உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் ரூபாய் 499 கோடி மதிப்பீட்டில் 45 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 700 படுக்கை வசதிகள் கொண்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு இன்று காலை 10 மணிக்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
பின்னர் உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 494.51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 1700 திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 102.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாலையில் புறப்பட்டு கோவைக்குச் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை பார்வையிடுகிறார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு பெருந்துறையில் நடந்த வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த 16 ஆயிரம் பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கவுள்ளார். இதையொட்டி உதகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிநவீன வசதிகள்
700 படுக்கை வசதி, பழங்குடியினருக்கு தனி வார்டு, 12 அறுவை சிகிச்சை அரங்குகள், எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் வசதி, இருபாலருக்கான தனித் தனி காத்திருப்போர் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட உதகை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது.
பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மருத்துவக் கல்லூரியில் பழங்குடியின மக்களுக்காக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில், பழங்குடியின ஆண்களுக்கு 10 படுக்கைகளும், பெண்களுக்கு 10 படுக்கைகளும், பிரசவத்திற்குப் பிந்தைய சிகிச்சைக்கு 10 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது பழங்குடியின மக்களுக்காக பிரத்யேகமாக திறக்கப்படும் முதல் மருத்துவமனை வார்டு என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்லாவுக்கு அடுத்தபடியாக
நாட்டிலேயே சிம்லாவுக்கு அடுத்தபடியாக மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற பெருமையை உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கடந்த அதிமுக ஆட்சியிலேயே இந்த மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தற்போது கட்டுமானப் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications