ஜனாதிபதியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பது ஏன்? யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்லவுள்ள நிலையில், அவரது பயணத்தை மையமாக வைத்து பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் உலா வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தமிழ்நாடு அரசு, முதல்வரின் டெல்லி பயணத்திற்கான காரணத்தையும், ஜனாதிபதியை அவர் சந்திப்பதற்கான நோக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள விவரம் வருமாறு;

சென்னையில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு அறிவித்தார். அதன்படி, இம்மருத்துவமனைக் கட்டடம் தரைத்தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகளை கொண்டுள்ளது.

இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு (27.4.2023) சென்னையிலிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்று, நாளை மறுநாள் (28.4.2023) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார்.
அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications