அதிமுக - அமமுக மோதல்: மதுரையில் 2 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் ரத்து
அதிமுக மற்றும் அமமுகவினரிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று நடக்கவிருந்த இரண்டு கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை : அதிமுக மற்றும் அமமுகவினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று மதுரை மாவட்டட்தில் நடக்க இருந்த இரண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளில் இருந்தே அதிமுக மற்றும் டி.டி.வி தினகரனின் அமமுகவினரிடையே மோதல் நடந்துவருகிறது.

இந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் எப்படியும் அதிகப்படியான இடங்களை பிடித்துவிட வேண்டும் என்று அதிமுகவினரும், ஏற்கனவே அதிமுகவில் இருந்து தற்போது டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களாக இருப்பவர்களும் எப்படியாவது பழைய இடங்களைப் பிடித்து விட வேண்டும் என்று எண்ணுவதால் மோதல் அதிகரித்துள்ளது.
இதனால் கொடைக்கானல், பாளையங்கோட்டை என தமிழகத்தின் பல இடங்களில் வேட்புமனுத் தாக்கலின் போதே, இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழையூர் மற்றும் உறங்கான்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் இன்று நடக்க இருந்த நிலையில், அவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தத் தேர்தலைத் தொடர்ந்து நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications