கொந்தளிக்கும் வங்கக் கடல்.. கடலுக்குப் போகாத மீனவர்கள்... தொடரும் கன மழை!
சென்னை; காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் போகவில்லை.
தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழப்புரம், தஞ்சை, திருவாரூர், நானை, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களிலும் மழை தொடரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடலோர மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

புயலாக மாற வாய்ப்பு:
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், நேற்று, தெற்கு தென்கிழக்கே 124 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது, அது மேலும் வலுப்பெற்று சென்னைக்கு கிழக்குப் பகுதியில் 90 கி.மீ தொலையில் மையம் கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடக்கு, வடகிழக்கு பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக வட மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் கன மழை அல்லது மக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வடக்கு கிழக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என அவர் கூறினார்.

கடலுக்கு செல்லாத மீனவர்கள்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த மழையில் அதிகபட்சமாக கந்தர்வக்கோட்டையில் 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவித்தது. அந்த மாவட்டத்தில் உள்ள கட்டுமாவடி, புதுக்குடி, அய்யம்பட்டினம், மணமேல்குடி, முத்துக்குடா, ஆர்.புதுப்பட்டினம் உள்பட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் நாட்டு படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் விட்டுவிட்டு மழை:
திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விட்டு விட்டு லேசாக மழை பெய்து வருகிறது. இதேபோல் அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களிலும் நேற்று லேசான தூறலுடன் மழை பெய்தது

குமரியில் தொடரும் கடல் சீற்றம்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு மாவட்ட கடலோர கிராமங்களில் கடல் சீற்றமும் காணப்பட்டது. குறிப்பாக தூத்தூர், சின்னத்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை கிராமங்களில் கடலரிப்பு அதிகமாக இருந்தது. இப்பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.

தூண்டில் வளைவுகளை தாண்டி கடலலை:
குமரி மாவட்ட கடலோர பகுதிகளில் பனை மர உயரத்திற்கு அலைகள் எழுந்தன. சுமார் 25 அடி முதல் 50 அடி உயரத்திற்கு எழுந்த கடல் அலைகளால், தூண்டில் வளைவுகளை தாண்டி ஊருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் கடற்கரை சாலைகள் துண்டிக்கப்பட்டன. தேங்காய்பட்டணத்தில் இருந்து இணையம் செல்லும் அரையன்தோப்பு பகுதியில் கடலரிப்பு காரணமாக சாலைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

பாம்பனில் கடல் கொந்தளிப்பு:
பாக்ஜலசக்தி கடலில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருந்தது. பாம்பன், ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்று வீசியதால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் மீனவர்களின் குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

படகுகள் சேதம்:
பாம்பன் மற்றும் தங்கச்சி மடத்தில் கரையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 7 நாட்டுப்படகுகள் கடல் சீற்றத்தினால் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. மேலும் பாதுகாப்பு கருதி, தனுஷ்கோடி, சேரான்கோட்டை, ஓலைக்குடா, வடகாடு, தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள், கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications