என்னாச்சு ஆட்டோ மீட்டர் கட்டணம்.. ? கொண்டாட்டத்தில் டிரைவர்கள்.. திண்டாட்டத்தில் பயணிகள்!
கோவை: தமிழகம் முழுவதும் பொருந்தும்படியான ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்போதிலும் அது நடைமுறைக்கு வராத காரணத்தால் தொடர்ந்து ஆட்டோ டிரைவர்கள் காட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. அப்பாவி பொதுமக்கள்தான் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொருந்தும்படியாக, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்து, கடந்தாண்டில் அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அது அக்டோபர் மாதம் 17ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
திருத்தப்பட்ட கட்டணத்தை மீட்டரில் பொருத்த உரிய கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதுவரை, உரிய ஒப்புதலுடன் திருத்தி அமைக்கப்பட்ட மீட்டர் கட்டண பட்டியலை, ஆட்டோ டிரைவர்கள் கட்டாயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.

கோவையில் இஷ்டத்திற்கு
ஆனால், கோவையில் திருத்தி அமைக்கப்பட்ட மீட்டர் கட்டணத்தை வசூலிக்காமல், ஆட்டோ டிரைவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின்றனர்.

கண்காணிப்புக் குழுக்கள்
ஆட்டோ மீட்டர் கட்டணத்தை கண்காணிக்க, போக்குவரத்து போலீசில், 15 குழு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த செயல்பாடுகள் எல்லாம், ஒரு சில வாரங்கள் மட்டுமே நீடித்தன.

மீண்டும் வேலையைக் காட்டும் டிரைவர்கள்
கெடுபிடிகள் காரணமாக, ஒரு சில வாரங்கள் 'அடக்கி வாசித்த' ஆட்டோ டிரைவர்கள், மீண்டும் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டனர்; சிக்கும் பயணிகளிடம் தாறுமாறான கட்டணம் வசூலிக்கின்றனர். மீட்டர் கட்டணம் வசூலிக்காத ஆட்டோக்களுக்கு, 100 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது. வேறு நடவடிக்கைகள் எதுவும் இல்லை.

கண்துடைப்பு
கூடுதல் கட்டண வசூலை தடுப்பதற்கான அதிகாரிகளின் நடவடிக்கைகள், கண் துடைப்பு வேலையாகவே உள்ளன.

வீடியோவில் சிக்கிய டிரைவர்கள்
கோவையில், இன்று சோதனை முயற்சியாக நேரு ஸ்டேடியத்திலிருந்து ராம் நகர் விவேகானந்தா சாலை வரை செல்ல மீட்டர் போட மறுத்ததுடன் ரூ 70 க்கு குறைவாக வர முடியாது என்ற ஓட்டுனரின் அடாவடிப் பேச்சு முதல் கேட்ட பணத்தை கொடுத்து வண்டியை விட்டு இறங்கும் வரையிலான வீடியோ பதிவுகளுடன் கோவை சரக போக்குவரத்து துறை இணை கமிஷனருக்கு அனுப்பப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications