குறைந்த கட்டணம் வாங்கும் ‘மக்கள் ஆட்டோ’க்களைத் தாக்கிய கோவை ஆட்டோ டிரைவர்கள்
கோவை: குறைந்த கட்டணம் வசூலிப்பதாக கூறி ‘மக்கள் ஆட்டோ'க்கள் மற்றும் அதன் டிரைவர்கள் மீது கோவை ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகரில் "மக்கள் ஆட்டோ" என்ற பெயரில் குறைந்த கட்டணத்தில் கடந்த சில தினங்களாக ஆட்டோக்களை சிலர் இயக்கி வருகின்றனர். இந்த ஆட்டோக்களில் குறைந்தபட்சம் சவாரிக்கு ரூ.14ம் , அடிசனலாக கிலோமீட்டருக்கு ரூ.6 வசூலிக்கப்படுகிறது. மேலும் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது வழங்குவதுடன்,படிப்பதற்கு நாளிதழ், நல்ல குடிநீர், செல்போன் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளும் இந்த ஆட்டோக்களில் உள்ளன.
இதனால் அனைத்து சவுகரியங்களும் இந்த ஆட்டோக்களில் இருப்பதால் பொது மக்கள் இந்த மக்கள் ஆட்டோக்களை அதிகம் விரும்பத் தொடங்கியுள்ளதால் கோவையில் உள்ள மற்ற இரு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கலெக்டரிடம் மனு அளிக்க ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர்கள் வந்தனர். மனு அளிப்பதற்காக இன்று அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களும் கலெக்டர் அலுவலகத்துக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தனர்.ஆனால் பலர் வரவில்லை.
மனு அளித்துவிட்டு இச்சங்கத்தினர் டவுன்ஹாலில் மற்றொரு சங்கத்தினருடன் இணைந்து மறியல் செய்ய ஊர்வலமாக சென்றனர். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே 2 ஆட்டோக்கள் பயணிகளுடன் சென்றன. உடனே தொழிற்சங்கத்தினர் அந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தினர். ஏன் மனு அளிக்க உடன் வரவில்லை என டிரைவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். ஆட்டோவில் இருந்த பயணிகளை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டனர்.
இந்த களேபரம் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே ரயில் நிலையத்தில் இருந்து "மக்கள் ஆட்டோ" ஒன்று வந்தது. ஆவேசம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அதை மறித்தனர். டிரைவரை வெளியே இழுத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களிடம் இருந்து அந்த ஓட்டுனர் உயிர் தப்பி ஓடினார். பின்னர் ஓட்டுநர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து "மக்கள் ஆட்டோவை" கீழே குப்புற தள்ளினர்.
அருகே கிடந்த பெரிய கல் மற்றும் செங்கல்லால் தாக்கினர். இதில் ஆட்டோவின் கண்ணாடி நொறுங்கியது. கோவை கணபதியிலும் ஒரு மக்கள் ஆட்டோ உடைக்கப்பட்டது.ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த அடாவடி செயலால் அப்பகுதி மக்கள் அச்சத்தோடு சென்றனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications