கேரளாவுக்கு சென்று வந்த கோவை பெண், மகனுக்கு பன்றிக் காய்ச்சல்
கோவை: கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்த கோவையைச் சேர்ந்த தாய் மற்றும் மகனுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
கோவை டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேட்டைச் சேர்ந்த 40 வயது பெண் தனது கணவர் மற்றும் 10 வயது மகனுடன் கடந்த வாரம் கேரளாவுக்கு சென்றார். கேரளாவில் உறவினர் வீட்டில் இருந்துவிட்டு அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை திரும்பினர். ஊர் திரும்பியதில் இருந்து அந்த பெண்ணுக்கும், அவரது மகனுக்கும் காய்ச்சலாக இருந்தது.

இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதையடுத்து அவினாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாயும், மகனும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் கணவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களில் இது 3வது பன்றிக்காய்ச்சல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை அரசு மருத்துவமனையில் தேவையான மருந்துகள் உள்ளதுடன், மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதால் யாரும் அஞ்ச வேண்டாம் என்று கோவை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications