50க்கும் மேற்பட்ட கோழிகள் மர்மச்சாவு: கோவை அருகே பறவை காய்ச்சல் பீதி!
கோவை: கோவை அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் வாத்துகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பறவைக் காய்ச்சல் குறித்த பீதியை உண்டாக்கியுள்ளது.
கேரளாவில் பறவைக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே, அங்கு சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கோழிகள் மற்றும் வாத்துகள் அழிக்கப் பட்டுள்ளன.
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் பறவைக் காய்ச்சல் பரவிடா வண்ணம் தடுக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், எல்லையில் மருந்து தெளிக்கப் பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப் படுகிறது.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கறி கோழி மற்றும் முட்டை கோழிப்பண்ணைகளிலும், பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், அன்னூரை அடுத்துள்ள வெள்ளமடை, சாமநாயக்கன்பாளையம், தொட்டிபாளையம், குப்பேபாளையம் மற்றும் காளிபாளையம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாட்டுக்கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன.
இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் வாத்துகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பல கோழிகள் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளன.
எனவே, அப்பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவி இருக்கலாம் எனச் சந்தேகிக்கப் படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த கால்நடைப் பராமரிப்பு துறை அதிகாரிகள், உயிரிழண்டஹ் கோழிகள் மற்றும் வாத்துகளின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications